News
oi-C Jeyalakshmi
சென்னை: தினசரியும் விளக்கேற்றும் வீட்டில் அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். ஒளியில் தேஜஸ் ஆக இருக்கிறேன் என கண்ணபிரான் கீதையில் அருளி உள்ளார். நம்முடைய நாட்டின் ஆன்மிகக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது தீபவழிபாடு. கடவுளை வழிபட காலையும் மாலையும் இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள். இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் தீபம் ஏற்றி வைப்பதன் மூலம் கொரோனா வைரஸ் என்ற தீய சக்தியை விரட்டலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
பிரதமரின் அறிவிப்புக்கு காரணம் உள்ளதா? இணையத்தில் எழுந்த விவாதம்
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம’ என்று கூறி வணங்குவது அவசியம்.
தீபஜோதியே நமோ நம :
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன சம்பதா
சத்புத்தி ப்ரகாசாய தீபஜ்யோதிர் நமோநம:
தீபம் ஏற்றுவதால் தேக சுகம், உடல் ஆரோக்கியம், தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் என்பது நம்பிக்கை. ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில் திருக்கோவில் கருவறையில் எரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கில் சேர்க்கப்படும் நெய்யானது அவ்வுயிரை காப்பாற்றும் சக்தி வாய்ந்ததாகும்.
திருக்கோவிலில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளியானது சூரியனின் மூலம் இறைவனை அடைந்து உடனுக்குடன் அதற்கான நற்பலன்களை நமக்கு அளிக்கின்றன. வேதாரண்யம் திருக்கோவில் அணையப்போகும் விளக்கை தூண்டிய எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்ததாக தல வரலாறு கூறுகின்றது. இதிலிருந்து திருக்கோவில்களில் ஏற்றப்படும் தீபத்தின் மகிமையை அறிந்து கொள்ளலாம்.

மகாலட்சுமியின் அருள்
நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். வீட்டை தூய்மைபடுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றார்.

எந்த நேரத்தில் விளக்கேற்றலாம்
தீபம் எற்றுவதற்கு உகந்த நேரம் அதிகாலை பிரம்ம முகூர்த்தம். அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை தீபம் ஏற்றலாம். காலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இந்த நேரத்தில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. அதோடு வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். தீபம் ஏற்றிய பின்னர் ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.

சிவன் சக்தியின் அருள்
தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

ஆரோக்கியம் அதிகரிக்கும்
விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். அந்த சமயத்தில் பெண்கள் கூந்தலை விரித்தபடி நிற்பது நல்லதல்ல. எனவே விளக்கு வைப்பதற்கு முன்பாக மாலை 5.30 மணிக்குள் பெண்கள் தலைவாரி, தங்களை அழகு செய்து கொண்டு விளக்கேற்ற தொடங்க வேண்டும்.
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கு ஏற்ற திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கு ஏற்ற தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கு ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கு ஏற்ற சனி கிரக தோஷம் விலகும்.

எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம்
நெய் தீபம் ஏற்றினால் செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும். நல்லெண்ணெய் தீபம் ஆரோக்கியம் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றினால் வசீகரம் கூடும். இலுப்பை எண்ணெய்யில் தீபம் ஏற்ற சகல காரிய வெற்றி கிடைக்கும். விளக்கெண்ணெயில் தீபம் ஏற்ற புகழ் தரும். விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ஆகிய ஐந்து எண்ணெய்களை கலந்து விளக்கேற்ற அம்மன் அருள் கிடைக்கும்.

விளக்கு ஏற்றக்கூடாத எண்ணெய்கள்
கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே அதிகரிக்கும். விளக்கு ஏற்றிய பின்பு அது தானாக அணையக்கூடாது. அணைய விடவும் கூடாது. தீபம் ஏற்றி வைத்து சில மணி நேரங்கள் கழித்த பின்னர் கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது அரிசியால் மட்டுமே குளிர்விக்க வேண்டும்.